தர்மபுரி செப் 25-
தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தகவல்
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது இதில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வழங்குவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளது. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு டெங்கு காய்ச்சல் சிறப்பு பிரிவினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது செய்தியாளர் சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி
தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்குவிற்கு உடனடி சிகிச்சை மேற்கொள்வதற்கு அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், மேலும் 4 அரசு மருத்துவமனைகளில் 60 படுகைகள் கொண்ட வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் குறைந்த அளவிலான டெங்கு பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. டெங்கு பாதிப்பினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு களப்பணியாளர்கள், மூலம் மருந்து தெளித்தல், கொசுப் புகை மருந்து அடிக்கும் பணிகள் செயல்படுத்தவும், காய்ச்சல் கண்ட பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீட்டில் உடைந்த பொருள்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் மழைநீர் தேங்கி அதன் மூலம் கொசு உற்பத்தியாகும். இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவக்கூடும். எனவே பொதுமக்கள் தங்களது வீட்டில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழித்து சுற்றுபுறத்தை துாய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்தபடுகிறார்கள்.
மேலும் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடரை கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும் எனவும், பிடித்த தண்ணீரை காற்று புகாவண்ணம் துணிகளைக்கொண்டு கட்டி மூடி வைக்க வேண்டும் எனவும், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, உரல், ஆட்டுக்கல் போன்ற வீட்டில் உபயோகப்படாத பொருட்களில் மழைநீர் தேங்காமல் அகற்றிட வேண்டும் எனவும், சுகாதாரபணியாளர்கள் வரும்பொழுது வீட்டின் உட்புறம் புகை மருந்து அடிக்க அனுமதி அளித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளாட்சித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். இதைத் தவிர்த்து எக்காரணம் கொண்டும் அருகில் உள்ள மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது. மருத்துவர்களின் ஆலோசனை இன்றி தாமாக எந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் உடல் நலம் பாதிக்கப்படும் என ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ம.சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ரமேஷ் பாபு, உள்ளிருப்பு மருத்து அலுவலர் நாகேந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.