பென்னாகரம் நவ 20-
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளி மல்லிகை மஹாலில் இன்று நடைபெற்ற 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2023, மாவட்ட அளவிலான விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், 1915 பயனாளிகளுக்கு ரூ.15.36 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:-
கூட்டுறவு வார விழாவானது, அகில இந்திய அளவில் ஆண்டுதோறும் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14-ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 20-ஆம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது 70-வது அகில இந்தியக் கூட்டுறவு வாரவிழா மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு" எனும் பிரதானப் பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் 523 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 498 முழுநேர நியாய விலைக்கடைகளும், 586 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் என ஆக மொத்தம் 1084 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நியாய விலைக் கடைகளில் 4,68,364 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியன விநியோகிக்கப்பட்டு வருகிறது.
2022-23-ஆம் நிதியாண்டில் 61,405 விவசாயிகளுக்கு ரூ.499.95 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் உட்பட இதர கடன்கள் 1,89,458 நபர்களுக்கு ரூ.1464.15 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 28,159 விவசாயிகளுக்கு ரூ.251.21 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் உட்பட இதர கடன்கள் 1,16,332 நபர்களுக்கு ரூ.936.35 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் / வங்கிகள் மூலம் பயிர்க்கடன் மட்டுமின்றி விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் கடன்கள் குறைந்த வட்டிவிகித்தில் நகைக் கடன்கள், பண்ணைச்சாராக் கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள், சிறு வணிகக் கடன். மாற்றுத்திறனாளிகள் கடன்கள், டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிர்க்கடனை தவணை தவறாது திரும்ப செலுத்துபவருக்கு 7% வட்டித் தொகை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் கூட்டுறவு வாரவிழா உறுதிமொழியானது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும், இன்று நடைபெற்ற 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவில் 922 நபர்களுக்கு பயிர்க்கடனாக ரூ.774.46 இலட்சமும், கால்நடை பராமரிப்பு கடன் 303 நபர்களுக்கு ரூ.131.18 இலட்சமும், 34 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 523 பயனாளிகளுக்கு ரூ.464.11 இலட்சமும், மாற்றுத் திறனாளி கடன்கள் 54 நபர்களுக்கு ரூ.27.71 இலட்சமும், டாம்கோ தனி நபர் கடனாக 34 நபர்களுக்கு ரூ.23.18 இலட்சமும், டாம்கோ குழுக் கடனாக 71 நபர்களுக்கு ரூ.38.66 இலட்சம், வீடு அடமானக் கடன் 8 நபர்களுக்கு ரூ.77.50 இலட்சமும் ஆக மொத்தம் இவ்விழாவில் 1915 உறுப்பினர்களுக்கு ரூ.15.36 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, அவர்கள் வழங்கினார்கள்.
இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி தர்மசெல்வன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. ஆர்.கவிதா ராமகிருஷ்ணன், பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் திரு. எம்.வீரமணி, பருவதனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. எம்.ராணி முனிராசு உட்பட கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி