ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசில் இயக்க தடை


பென்னாகரம், ஆக.17-

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் காவிரி நீர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமார் 19000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரு தினங்களுக்கு மேலாக தமிழக காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 13,000 கன அடியாக இருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை திடீரென அதிகரித்து விநாடிக்கு 28,000 கன அடியாக தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரு தினங்களாக காவிரி ஆற்றின் நீர்வரத்து குறைந்து வந்ததால் சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு பகுதி வரை தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் சனிக்கிழமை திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு சனிக்கிழமை முதல் தடை விதித்துள்ளார். மேலும் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தொடர்ந்து 34 வது நாட்களாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் தமிழக காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பது, குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Previous Post Next Post

نموذج الاتصال