தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள், களப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கான இலவச கண்பரிசோதனை முகாமினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.07.2025) துவக்கி வைத்தார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 6 வயது வரையிலான குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான பல்வேறு அணுகுமுறையை செயல்படுத்தி வருகிறது. மேலும், "ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாடு" என்ற இலக்கை எட்டுவதே இதன் நோக்கமாகும்.
இன்றைய தினம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான இலவச கண்பரிசோதனை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
மேலும், இளம்வயது கர்ப்பம், இளம்வயது திருமணம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், களப்பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படாமல் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.பவித்ரா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.