பழைய புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் பேருந்து இயக்க வேண்டுமென தலைமை செயலாளர் நா.முருகானந்தம் அவர்களிடம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கடிதம் அளித்து வலியுறுத்தினார்.


தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகளும், அருகிலுள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம் திருப்பத்தூர், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் முன்பு போலவே பழைய புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் இயக்க வேண்டுமென தலைமை செயலாளர் நா.முருகானந்தம் அவர்களை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கடிதம் அளித்து வலியுறுத்தினார். 

அக்கடிதத்தில், தருமபுரி புதிய புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாளில் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று பார்த்தால், மாறாக குழப்பம்; மக்களுக்கு பெரும் சிரமம். தருமபுரி இதுவரை காணாத போக்குவரத்து நெரிசல். 

மாவட்டத்தின் தலைநகரம் என்ற வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, நலவாழ்வுத் துறையின் அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகம் போன்ற மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் அலுவலகங்கள், பழைய தருமபுரி - சேலம் சாலையில் தான் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விட, பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இச்சாலையில் தான் இருக்கின்றது.

புதிய ஏற்பாட்டின்படி, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு அலுவலகங்களுக்கும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் வரும் பொதுமக்கள் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி ஷேர் ஆட்டோ அல்லது டவுன் பஸ் பிடித்து நான்கு சாலை சந்திப்புக்கு வந்து மீண்டும் ஷேர் ஆட்டோ அல்லது டவுன் பஸ் பிடித்து செல்ல வேண்டும். தலையை அறுத்து விட்ட வாத்து போல மக்கள் குழம்பித் தவிக்கிறார்கள். கடுமையான பாதிப்பு.

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தை வரவேற்கும் அதே நேரத்தில், இந்த மாற்றத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? அவற்றுக்கான தீர்வு என்ன? பேருந்து மாற்றத்துக்கு முன்பு செய்ய வேண்டியது என்ன? என்ற ஆய்வு செய்திருக்க வேண்டும்.

தருமபுரி நகரம் தருமபுரி மாவட்டத்தின் தலைநகரம். பல்வேறு துறைகளின் மாவட்டத் தலைமை அலுவலகங்களும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் அமைந்துள்ள பழைய தருமபுரி - சேலம் சாலை என்றைக்குமே நகரத்தின் முதன்மைச் சாலையாகத் தான் இருக்கப் போகின்றது. இந்த சாலை தருமபுரி மாவட்ட மக்கள் அனைவரும் எளிதில் வந்து செல்லும் வகையில் மாவட்டத்தோடு இணைக்கப்பட வேண்டும். 

இப்போதைக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகளும், அருகிலுள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம் திருப்பத்தூர், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் முன்பு போலவே பழைய புறநகர் பேருந்து நிலையத்துக்குத்தான் வரவேண்டும். 

புதிய பேருந்து நிலையம் வெளிமாவட்டங்களுக்கு, வெளிமாநிலங்களுக்குச் செல்லும் விரைவுப் பேருந்து நிலையமாக பயன்படுத்தப்பட வேண்டும். இன்னும் பத்தாண்டுகளில் நகரத்தின் வளர்ச்சியை ஒட்டி மாற்றங்கள் நிகழலாம். ஆனால் மாற்றங்கள் திணிக்கப்படக் கூடாது.

பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கடைகளை ஏலம் எடுத்து வாடகை செலுத்தி வரும் வணிகர்கள், சிறு தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள் கடந்த 15 நாட்களாக வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வியாபாரிகள் மிகுந்த மன உளைச்சலில் நேற்று முதல் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்துவதற்கு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்ற நிலையில் உள்ளனர்.

தற்பொழுது அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மட்டும் தற்காலிகமாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்கின்றன. இது ஒரு பகுதியில் இருந்து வரும் பொதுமக்களுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றாலும், தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி மற்றும் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் பேருந்துகளும், சேலம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் மீண்டும் நிரந்தரமாக பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துச்செல்லும் வகையில் இயக்கினால் மட்டுமே தருமபுரி ஒட்டுமொத்த மாவட்ட மக்களுக்கும் தீர்வு ஏற்படும்.  

பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்கும், வணிகப் பெருமக்களின் வாழ்வாதாரத்திற்கும், உதவும் வகையில் பேருந்துகளை தருமபுரி பழைய பேருந்து நிலையத்திற்கு நிரந்தரமாக மீண்டும் இயக்கவும், பழைய பேருந்து நிலையத்தை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post

نموذج الاتصال