தருமபுரி அக்-2,
காந்தியமே இன்றையத் தேவை என முன்னாள் எம்பி- யும், தகடூர் புத்தகப் பேரவையின் செயலாளருமான
மரு.இரா. செந்தில் குறிப்பிட்டார்.
தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா முத்து இல்லத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் வெ. மாதன் தலைமை வகித்தார்.
மகாத்மா காந்தி படத்தைத் திறந்து வைத்து முன்னாள் எம் பி - யும் தகடூர் புத்தகத் பேரவையின் செயலாளருமான மரு.செந்தில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அன்னை கஸ்தூரிபா காந்தி அறக்கட்டளை தலைவர்
செ.சக்திவேல், செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி, நகர் மன்ற உறுப்பினர் ஏ.மாதேஸ்வரன், வழக்குரைஞர்கள் கே.கபிலன், பெ.மாதேஷ் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் மரு.இரா .செந்தில் பேசியதாவது:
மகாத்மா காந்தி மறைவையொட்டி பேசிய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதவெறியர்களால் நாடு துண்டாக்கப்பட்டுவிடும் என எச்சரித்தார். தீவிர வலதுசாரி அமைப்பான
ஆர்.எஸ்.எஸ் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. மணிப்பூரில் பழங்குடி தெய்வங்களை முன்னிறுத்தி செயல்படுகின்றனர். வரலாற்றில் பல வெற்றிகளுக்கு போர் அடிப்படையாக அமைந்தது. ஆயினும் காந்தியம் எவ்வாறு வெற்றி பெற்றது என்பது முக்கியமானது. போர் தற்காலிக வெற்றியைத்தான் தரும். நிரந்தர தீர்வைத் தராது. ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானுடன் நடத்திய போரில் வெற்றி பெற்றாலும் போரின் மூலம் மட்டும் ஆட்சியை நிலை நிறுத்தி விடவில்லை. பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டனர். உயர் சாதியினர் மட்டும் படிக்கும் குருகுலக் கல்வி முறையை மாற்றி அனைவரும் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தினர். எனவே, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அவசியம். இலங்கையில் போரின் மூலம் மட்டும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை தோற்றுப் போனது. உலகம் முழுவதும் உரிமைக்கான போராட்டம் நிச்சயம் வெல்லும். இந்தியாவில் அதிதீவிர வலதுசாரிகள் மேற்கொள்ளும் வன்முறை நடவடிக்கையை, பாசிசத்தை காந்திய வழியிலேயே தீர்க்க முடியும் என்றார்.
முன்னதாக, இன்று காலை செம்மாண்ட குப்பம் அரசு பள்ளியில் முத்து நினைவு அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை பொருளாளர் என்.கந்தசாமி நன்றி கூறினார்.
Tags
தர்மபுரி