தருமபுரி நவ 13-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஆர். சின்னசாமி தலைமையில் இன்று (13.11.23) தருமபுரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் அ.குமார் அறிக்கை சமர்ப்பித்தார். மாநிலக்குழு உறுப்பினர் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, வி.மாதன், சோ.அருச்சுனன், வே.விசுவநாதன், ஆர்.மல்லிகா, வி.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
2025 டிசம்பர் 31க்குள் இந்தியா முழுவதும் அனைத்து மின் நுகர்வோரும் ஸ்மார்ட் மீட்டர் எனப்படும் மின் மீட்டர்களை பொருத்த வேண்டுமென ஒன்றிய அரசாங்கம் நிர்பந்தப்படுத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பிரிபெய்ட் மீட்டர்களாகவும் செயல்படும். இந்த மீட்டர்கள் முன்பணம் செலுத்தி ரீசார்ஜ் கார்டுகளைப் பெற்று பணம் இருக்கும் வரை மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளவும், மணிக்கணக்கில் மின்சார நுகர்வை கணக்கிட்டு அதன் அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கும் ஏதுவான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடியிருப்பு பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின்சாரம் பயன்படுத்தும் நேரத்தை உச்சபட்ச நேரமாக கூறி கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதற்கும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சாதாரணக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வழக்கமான சாதாரண கட்டணத்தை வசூலிக்கும் முறையிலும் கணக்கிட்டு மின் கட்டணத்தை பிரிபெய்டு அட்டையிலிருந்து எடுத்துக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர், எந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறாரரோ, அந்த நிறுவனத்திடம் இருந்து முன்பணம் செலுத்தி பிரிபெய்டு அட்டைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இதை பயன்படுத்த முடியும். இதன் மூலம் மின்சார வாரியங்களுக்கு மூடு விழா நடத்தப்படும். பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசின் உட்கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்வதற்கு இது வழிவகை செய்யும்.
தனியார் நிறுவனங்களிலும் பிரிபெய்டு அட்டைகள் பெறுவதன் மூலம் இப்போது பெறுகிற இலவச மின்சாரமோ, மானியங்களோ இல்லாத நிலை உருவாகும். தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள திட்டமே இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டமாகும். மேலும், ஆரம்பத்தில் ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் ஏதும் வசூலிக்காமல் எல்லோரும் ஏற்றபின்பு ஸ்மார்ட் மீட்டரின் விலையை மின் நுகர்வோரிடம் மாதந்தோறும் வசூலிப்பதற்கான சூழ்ச்சியும் இதற்குள் அடங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தவும், வீடுகளுக்கும், விவசாயத்திற்கும், விசைத்தறிக்கும் உள்ள இலவச மின் சலுகைகளை பறிப்பதற்கும் மொத்த மின்சார வாரியத்தை கலைத்து தனியார் வசம் மின் விநியோகத்தை ஒப்படைக்கும் நோக்கங்களோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மாநிலங்களுக்கு நிதி உதவி செய்வதாகவும் ஒன்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதை ஏற்கவில்லை யென்றால் அந்த நிதி உதவி கிடைக்காது என்றும், இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கூடுதல் சுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் ஒன்றிய அரசு பயமுறுத்தி வருகிறது.
மின் நுகர்வோர் மற்றும் மின் ஊழியர்களும் தொழில் அமைப்புகளும் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு இந்த திட்டத்தில் உள்ள சூழ்ச்சிகளை உணர்ந்து இதை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இதனால், ஏற்படும் ரூ. 9 ஆயிரம் கோடி இழப்பை ஈடுகட்டும் வகையில் பிற வழிகளில் நிதி திரட்டவும் உத்தேசித்துள்ளது.
எனவே, இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காகவும் மின் நுகர்வோரை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கி அதே சமயம், தனியார் பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசால் வழிவகை செய்துள்ள இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மின் நுகர்வோருக்கும் மின்சார வாரியத்திற்கும் பெரும் சுமைகளை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு எந்த காரணம் கொண்டும் அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீடு வீடாக மக்களைச் சந்தித்து ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் அபாயத்தை எடுத்துரைத்தும், இதனை கைவிட வலியுறுத்தியும் மக்களைத் திரட்டி மாவட்டம் முழுவதும் மின் வாரிய அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு பொது மக்களும், விவசாய பெருங்குடி மக்களும், நெசவாளர்களும், வணிகப் பெருமக்களும், குறு-சிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ளிட்டு அனைத்து ஜனநாயக சக்திகளும் பேராதரவளிக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாவட்ட செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய பாக்கியை வழங்குக
ஒன்றிய பாஜக அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை படிப்படியாகக் குறைத்து சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆண்டுக்கு 40 நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை. பல பகுதிகளில் இரண்டு, மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் குறிப்பாக கிராமப்புற பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி நல்லம்பள்ளியில் நவம்பர் இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரைத் தடுத்து நிறுத்திட
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களில் மூவாயிரம் குழந்தைகள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இஸ்ரேலின் கொடுங் கோன்மைக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. இதனைக் கண்டித்து, போரை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி நவம்பர் 14 ம் தேதி அரூரிலும், நவம்பர் 18 ம் தேதி தருமபுரியிலும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்பாட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
Tags
தருமபுரி